Wednesday, July 25, 2012

* பூமி நடுங்குமடா!



பூமி நடுங்குமடா! 

ஆளில்லை என்பதாலே 
தானென்ற அகங்காரம் 
தலைவிரித்து ஆடுதடா 
ஊனுருக ஏழைகளின் 
உள்ளமெல்லாம் புண்ணாக 
உயிரோடு கொல்பவனைக் - காலம் 
உயர்வாய் மதிக்குதடா! 

பொறுமை ஒருநாள் 
பொங்கி எழுந்தால் 
பூமி நடுங்குமடா 
கொடுமை புரியும் பாதகனை - அவன் 
குறைகள் விழுங்குமடா! 
காலையாகி மதியமாகி 
மாலையானது பலபொழுது, 
மாலையாகி பகலும் முடிந்து 
இருளில் போனது பல இரவு 

ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன் 
வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றால் 
தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன் 
பேராசை நிலைதன்னை என்னென்று சொல்வேன்! 

மானம் என்றே மங்கை அழுதால் 
இன்ப மென்றே நகைப் பானே 
பால வயதில் செய்த வினையை 
வாழ்வு முடிவில் நினைப்பானே! 

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான் 
காணாத கனவும் காண்பானே - அவன் 
ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடிக் 
கூனாகி ஊணாகிக் கூடாகிப் போவானே!

No comments:

Post a Comment